குட்டி(டு)க் கதை

தனேஸ் ஜன்னலினூடாக எட்டிப் பார்த்தான். கடற்கரை உப்புக் காற்று முகத்தில் வீசியதுடன் அவன் கேசத்தையும் மெல்ல மெல்ல குளப்பியது. காலி வீதியில் வழமையான வாகன நெரிசல். இவற்றிற்கு மத்தியில் அவன் முகத்தில் ஒரு மந்திரப் புன்னகை. காரணம் ஈஸ்வரியின் மாருதி ஆபீஸ் வளாகத்தை விட்டு வெளியேறுவது தெரிந்தது.

தனேஸ் தனது கபினில் இருந்து வெளியேறி ஈஸ்வரியின் காபினுக்குள் நுழைந்தான். தனது பென் ட்ரய்விலிருந்து (Pen Drive) ஒரு WAV ஃபயிலை எடுத்து ஸ்டார்ட் விண்டோஸ் என்பதற்கு போட்டுவிட்டான்.இப்போது அவன் மனதில் அளவிலா சந்தோசம். எத்தனை வருடங்களாக பூட்டி வைத்திருந்த காதல், இன்றைக்கு கணினி மூலமாக தூது போகப்போகின்றதே.

இந்த தனேஸ் யார் இவன் கணனியை தூது அனுப்ப காரணம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தனேஸ், ஈஸ்வரி இருவருமே கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். படிக்கும் காலத்திலேயே தனேஸ் ஈஸ்வரி மேல் காதல் வயப்பட்டாலும் ஏதோ பயம் காரணமாகவோ என்னவோ தன் காதலை கூறவில்லை. பல்கலை முடிந்து எதிர்பாராத விதமாக இருவரும் ஒன்றாக ஒரே ஆபீஸில் வேலை பார்க்கும் சந்தர்ப்பமும் வந்தது.

ஆரம்பத்தில் சிறிது தயங்கினாலும் பின்பு யோசித்தான். “நான் எதற்கு நேரடியாக காதலை சொல்ல வேண்டும், வேறெதாவது வழி??” என மனதுக்குள் யொசித்துக்கொண்டு இருந்தபொது விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் ஒலி தனேஸின் காதில் கணீர் என ஒலித்தது. பற்களால் கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டே சிரித்தான. “இனிமேலும் பொறுப்பதிற்கில்லை” என்று அவன் உள்மனம் கூறிக்கொண்டது.

ஃபவ் ஸ்டார் படத்தில் இருக்கும் ஒரு பாடலான “ஈஸ்வரி! ஈஸ்வரி உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்” என்ற பாடலின் முதல் வரியை அடோப் ஆடிசன் என்ற செயலியின் மூலம் வெட்டிக் கொண்டான். இப்போ மீண்டும் தனேசைப் பயம் தொற்றிக்கொண்டது. முதலில் என்னொட பெயரைப் போட வேண்டாம். இத மட்டும் கேட்கும்போது ஈஸ்வரியின் மாற்றத்தைப்பார்த்து நான்தான் அதைப் போட்டேன் என்று கூறிவிடலாம் என எண்ணிக்கொண்டான்.

பின்னர் முன்பு கூறியது பொல கன்றோல் பனல் சென்று விண்டொஸ் ஸ்டார்ட் என்ற ஒலியாக இந்தப் பாடலைப் போட்டு விட்டான்

மறு நாள் உதயமானது தனேஸ் பரபரப்பாக காலையிலேயே எழுந்து விட்டான். தனேஸோட அம்மாவும் என்னடா இது 9 மணி ஆபீசுக்கு 8 மணிக்குத்தான் எழும்புவான் இண்டைக்கு 5 மணிக்கே எழும்பி ஆட்டம் போடுறானே என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். 7 மணிக்கே உடுப்பெல்லாம் போட்டு தயாராகி வி்ட்டான்.

“அம்மா.......! சாப்பாடு” என கூவினான் தனேஸ்

“பொறடா கொஞ்சம். என்ன இண்டைக்கு ஆபீஸில யாருக்கும் கலியாண வீடோ! துரை கலக்கலா வெளிக்கிட்டு இருக்கிறீங்க’ கொஞ்சம் நக்கலாகவே கெட்டாள் அன்புத் தாயார்.

“கலியாணமும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. நீங்க கதைய விட்டிட்டு எனக்கு சாப்பாடு தர்ற வழியைப் பாருங்கோ” அலுத்துக் கொண்டான் தனேஸ்.

மகனின் மனதைப் புரிந்து கொண்ட தாயார் மேலும் ஏதும் பேசாமல் சாப்பாட்டைப் பரிமாறினாள். சாப்பாடும் தனேஸ்ஸிற்கு இறங்கவில்லை. நினைவெல்லாம் ஈஸ்வரியும் அவள் கணணியும் தான். என்னாகுமோ ஏதாகுமோ என அவனின் உள்மனம் பதறிக்கொண்டு இருந்தது.

அவசரம் அவசரமாக தனது பெஜடோவில் ஆபீசுக்குப் காலி வீதியின் வழியே பயனமானான். சிறிது நேரத்திற்கே புறப்பட்டதனால் வீதியில் அவ்வளவாக வாகன நேரிசல் இருக்கவில்லை. ஆபிஸில் தனது கபினில் உட்கார்ந்து கொண்டு ஈஸ்வரியின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தான்.
இறுதியாக கிளைமாக்சும் வந்தது. அன்று என்றுமில்லாத வாறு ஈஸ்வரி ரெம்பவுமே அழகாக இருந்தாள். வழக்கம் போல “குட் மொர்னிங் தனேஸ்” என்றாள் தனேசும் முப்த்திரெண்டு பல்லும் வெளியே தெரியுமாறு சிரித்துக்கொண்டு தலையை ஆட்டிக்கொண்டான்.

காலி வீதியில் கடற்பக்கம் இவர்களது ஆபீஸ் அமைந்து இருந்ததனால் காலி முகத் திடல் அழகாக தெரிந்தது. கோல் ஃபேஸ் ஹொட்டேல், உலக வர்த்தக மையம் என அழகாகவே இருந்தது கொழும்பு மாநகரம். தூரத்தில் ஜோடி ஜோடியாகப் பல ஜோடிகள் குடைக்குள்ளே. அவற்றைப்பார்த்ததும் தனேஸின் முகத்தில் ஒரு சந்தோச ஒளிக்கீற்று. தானும் ஈஸ்வரியும் இறால் வடையைக் கொறித்துக் கொண்டு இருப்பதாகவும், ஒரே ஐஸ்கிறீமை இருவருமாக மாறி மாறி சுவைப்பதாகவும் பல்வேறு கற்பனைகளில் மூழ்கி இருந்த தனேஸ் ஈஸ்வரி தன்னை நோக்கி வருவதைக் கண்டதும் அவற்றிலிருந்து விடு பட்டுக்கொண்டான்.

அவனது இதயம் இப்போ பட பட என அடிக்கத் தொடங்கியது. வைரமுத்து ஒரு பாடலில் கூறியபடி அவனது வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருண்டது.

“ஈஸ்வரி! ஈஸ்வரி! சரியெண்டு சொல்லிடு.... பிளீஸ்.................” அவனது வாய் முணு முணுத்தது.

தனது இருக்கையிலிருந்து எழுந்து கொண்ட தனெஸ் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு
“ஈஸ்வரி...... இண்டைக்கு......”

“தனேஸ்! கொஞ்சம் பொறுங்கோ... இப்ப வாறன்...”

ஈஸ்வரி தனேசின் கபினுக்குப் பக்த்துக் கபினில் இருந்த குமரனிடம் சென்றாள். உள்ளே இருவரும் ஏதோ பேசுவதும் பின்னர் ஈஸ்வரியின் கல கல என்ற சிரிப்புமாக மாறி மாறிக் கேட்டது. தனேசிற்கு எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் ஈஸ்வரி குமரனின் கபினிலிருந்து வெளியேறிப் போனால். போகும் போது அவள் கண்களில் வெட்கச் சாரல் வீசியது. சற்றுக் கூட பொறுமையில்லாமலிருந்த தனேஸ் குமரனின் கபினுக்குள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான்.

“டேய்! மச்சான் என்னடா நடந்தது...?”

“அடேய் மச்சி! ஐஞ்சு மாசமா நான் பூட்டி வைத்திருந்த காதல் இண்டைக்கு இந்த விண்டோசால் சரியா வந்திட்டுதடா”

“என்ன வின்டோசாலயா???????????” விழி பிதுங்கினான் தனேஸ்.

“ஓமடா! யாரோ அவளிண்ட கணனியில ஃபவ் ஸ்டார் பாட்டை போட்டு விட்டாங்கள் அதன்ட முடிவில இப்படிக்கு குமரன் என்டு ஒரு WAV பையிலை ரெகார்ட் பண்ணி ஒட்டிவிட்டேன். அவ்வளவும் தாண்டா நான் செய்தது. இப்ப வந்து தனக்கும் என்ன பிடிச்சிருக்கு எண்டு சொன்னாள்டா. ஐயையோ! ஐயையோ பிடிச்சிருக்கு எண்டு பாட்டும் பாடினாள்டா. இன்றய நாள என்ற வாழ்கையில மறக்க ஏலாதுடா” என்று மூச்சு விடாமல் கூறி முடித்தான் குமரன்

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு